உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, June 14, 2011

அமீரகத்திற்கு கோடைக்காலம்! மயிலாடுதுறையில் பதிவர்களை சந்திக்க ஆவல்!


அமீரகத்தில் கோடைக்காலம் துவங்கியாச்சு வேர்வைக்காக நடக்க வேண்டிய அவசியமில்லை சும்மா இரண்டு நிமிடம் நின்றாலே நம் உடைகள் வேர்வையால் நனைந்து விடும். இந்த ஆண்டு கோடையின் துவக்கம் கொடூரகமாக இருக்கிறது.ஜஶலை முதல் வாரத்திலிருந்து பள்ளிகளுக்கு இரண்டு மாதங்கள் விடுமுறை துவங்க இருக்கிறது.

குழந்தைகள் கோடைக்கால விடுமுறையில் அமீரகத்தில் இருப்பதை விரும்புவதில்லை. தங்களின் நாட்டிற்கு செல்ல மிகவும் விரும்புகிறார்கள். நாங்கள் குடும்பத்துடன் ஆண்டுதோறும் இந்தியாவிற்கு சென்று விட்டு ஒரு மாதத்தில் நான் அமீரகத்திற்கு மீண்டு விடுவேன். ஆனால் எனது குடும்பத்தார்கள் இரண்டு மாதம் முழுசாக அங்கு இருந்து விட்டு தான் வருவார்கள்.

ஒரு மாறுதலுக்காக எனது துணைவியார் இந்த ஆண்டு தாயகம் செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால் நான்காவது படிக்கும் எனது இளைய மகளோ கட்டாயமாக ஊருக்கு போய்தான் ஆகவேண்டும் என்று கூறினாள். ஏன் போகனும் என்று கேட்டதற்கு உறவுகளை பார்க்க வேண்டும் அதாவது பாட்டிம்மா அத்தாவுடைய அம்மா அம்மாவுடைய அம்மா இவர்கள் தங்கள் பேரன் பேத்திகளுக்கு கொடுக்ககூடிய அன்பை இந்த குழந்தைகள் மிஸ் பண்ண விரும்புவதில்லை. அதுமட்டுமில்லை உறவுக்காரர்களின் குழந்தைகளுடன் விளையாடுவது ஊர்சுற்றுவது இப்படி நிறைய விசயங்களுக்காக இந்த குழந்தைகள் தாயகத்தை பெரிதும் விரும்புகிறார்கள்.

இவர்களுக்கா வேண்டி ஆண்டுதோறும் தாயகம் சென்று வருவது வழமையாக இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு நம்தாய் நாட்டின் இயல்பையும் இயற்கையையும் காட்டவேண்டியது பெற்றோர்களின் கடமையாகவும் இருக்கிறது. அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்பு நம் நாட்டில் இல்லை என்றாலும் நம் தாய்நாட்டின் சுவாசத்தை வளரும் குழந்தைகளுக்கு நாம் ஊட்டியே ஆகவேண்டும். வளைகுடா போன்ற நாடுகளில் எத்தனை ஆண்டுகள் பணிப்புரிந்தாலும் அந்த நாட்டின் குடியுரிமைப் பெற்றவராக நாம் ஆகமுடியாது. எந்த நேரத்திலும் நாம் நம் தாய் நாட்டிற்கு அனுப்பப்படுவோம் என்பது நிதர்சனம். அதை உணர்ந்து நாம் குழந்தைகளை தயார்படுத்த வேண்டும்.

சென்ற ஆண்டு அமீரக கோடைவிடுமுறையில் வடஇந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்ட எனது பிள்ளைகள் தங்களின் பாடத்தில் படித்ததை நேரடியாக காண்கின்ற போது அளவிலா ஆனந்தம் கொண்டார்கள்.

சுற்றுலா பெற்றோர்களுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. குழந்தைகளுடன் நாம் வாழ்ந்தாலும் குழந்தைகளுடன் நாம் முழு நேரத்தை கழிப்பதில்லை ஆனால் சுற்றுலா நமது முழு நேரத்தை குழந்தைகளுடன் கழிப்பதற்கு வாய்ப்பைத் தருகிறது. நம் வசதிக்கேற்ப ஆண்டுதோறும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதினால் பணம் சிலவானாலும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.

இந்த ஆண்டு கேரளா பக்கம் சுற்றுலா சென்றுவர உள்ளேன் வழக்கம் போல சுற்றுலா பதிவு எழுதுவேன்.

நிறைய திட்டங்களுடன் இந்த விடுமுறை நாட்களை கழிப்பதற்கு ஆயத்தமாகி உள்ளேன் எனது திட்டங்கள் இறைவனின் அருளால் நலமாய் நடந்தேர தாங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.

எப்பொழுதும் விடுமுறையில் ஊருக்கு செல்லும்போது உறவினர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்கு அமீரகத்திலிருந்து சாமான்களை வாங்கி கட்டிக்கொண்டு அதற்கு தனியாக லக்கேஜ் சார்ஜ் கொடுத்தும் சில நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் கஸ்டம்ஸில் தீர்வை கட்டியும் பெரிய போராட்டம்போல வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ( இப்போதும் சிலர் இப்படிதான் வருகிறார்கள்) ஆனால் சமீபகாலமாக எல்லா சாமான்களும் சென்னையிலேயே அமீரக விலைக்கும் அதைவிட குறைவாகவும் கிடைக்கிறது.
பெண்களுகான ஆடைகள், சிறுவர், சிறுமிகள், ஆண்களுக்கான சட்டை, டவுசர் இப்படி அனைத்துமே அங்கு கிடைப்பதால் நாம் அமீரகத்தில் அலைந்து திரிந்து பொருளை வாங்கிக் கொண்டு ஏர்போர்ட்டில் லக்கேஜ் கட்டி பணத்தை விரயம் செய்வதை விட, சென்னையில் தி நகருக்கு சென்று சில மணி நேரங்களில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு அழகாக வீடுபோய் சேர்ந்துவிடலாம்.
இதனால் நமக்கு நேரம், மனஉலச்சல், பணவிரயம் எல்லாம் மிச்சப்படும்.

என்னத்தான் இருந்தாலும் எங்க கிராமத்து பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. கட்ட விலக்கமாறாக இருந்தாலும் கப்பல் விலக்கமாறாக இருக்கனும்னு சொல்லுவாங்க. நாம மாறினாலும் இந்த பழமொழி மாறாது.

இந்த பதிவிற்கு பின் ஊர் சென்று பதிவு எழுதலாம் என எண்ணமிருக்கிறது அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப. மயிலாடுதுறை பதிவர்களை சந்திக்க ஆவல் தொடர்புக் கொள்ளுங்கள். 9486718827 இம் மாதம் 20 தேதிக்குபின் மொபைல் ரிங் ஆகும்.நன்றி

Friday, June 10, 2011

ஊழலை ஒழிக்க 25 கோடி பேர்களில் நீங்களும் ஒருவர்


ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா நிறைவேற்றுவதற்கு சுமார் 25 கோடிபேர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் அப்போதுதான் அதை நிறைவேற்ற முடியும் என்று மத்திய அரசு தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது ஆகையினால் நாமும் இந்த போராட்டத்தில் இருக்கின்ற இடத்திலிருந்தே நமது உணர்வை பதிவு செய்யலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய வேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி விடும். இதுவே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும் ஒருவராக இணைத்துக்கொள்ளலாமே.,

அழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789 மற்றும் 0 22 6155 0789.

Thursday, June 9, 2011

எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு)


எங்க ஊரு நல்ல ஊரு” என்ற தலைப்பில் இருபத்தைந்து பதிவர்களை தேர்வு செய்து தொடர் பதிவெழுத அழைப்பு விடுத்து அதில் என்னையும் அன்பு சகோதரி ஸாதிகா அவர்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தொடர் பதிவு எப்படி எதை எழுதவேண்டும் என்பதை இதோ ஸாதிகா கூறுகிறார்கள்

“பதிவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்,புகுந்த ஊர்,வாழ்ந்த ஊர்,புலம் பெயர்ந்த ஊர் மற்றும் நாடுகளில் உள்ள நிறைவான,குறைவான,போற்றத்தக்க,வெறுக்கத்தக்க,சுவாரஸ்யமான,சிறப்பான குணாதிசயங்களை எழுதிப்பகிர்ந்தால் அவ்வூர்களைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளலாமே.”

இது நல்ல முயற்சி பல பதிவர்களிடமிருந்து பல ஊர்களைப் பற்றிய விபரங்கள் கிடைக்கும்.

,இதில் எனது ஊரைப்பற்றிய செய்திகளை நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

* கிளியனூர் எங்கு இருக்கிறது? எந்த கிளியனூர்? என்ற கேள்விகள் பலருக்கு தோன்றலாம். ஆம் இதே பெயரில் மூன்று கிளியனூர் இருக்கிறது. ஒன்று விழுப்புரம் பக்கமும், இன்னொன்று நன்னிலம் பக்கமும் இருக்கிறது. நான் பிறந்த கிளியனூர் தஞ்சை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி தற்போது நாகை மாவட்டத்திற்குள் ஐக்கியமாகி, மயிலாடுதுறையிலிருந்து (12 கீ.மீ) திருவாரூர் செல்லும் சாலை வழியாக சுந்தரப்பன் சாவடியிலிருந்து 4 கீ.மீ தூரம் உள்ளே சென்றால் பசுமைப் போர்வையை போர்த்தியதுபோல, சுற்றிலும் வயலும், தோப்புகளும் சூழ்ந்து அழகிய மாதிரி கிராமமாக பல ஆண்டுகளுக்கு முன்னே பெயர் பெற்றது கிளியனூர் வரலாறு.


* 1955 ஆம் ஆண்டிலேயே சுய தேவை பூர்த்தியில் தன்னிறைவு அடைந்த இந்திய கிராமங்களின் வரிசையில் தஞ்சை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிராமமாக “மாதிரி கிராமம்” என்ற சிறப்பை பெற்று அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் கரங்களால் நேருவிருது வாங்கிய பெருமை எங்கள் கிளியனூருக்கு உண்டு.

* கிளியனூர் என்றாலே கொடைவள்ளல் S.A.அப்துல் மஜீதை (சீனா அனா) அவர்களை யாருமே மறக்க மாட்டார்கள். கிளியனூருக்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல ஊர்களுக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் வள்ளலாக திகழ்ந்தவர்கள். இன்று புகழ் பெற்ற டாக்டர் முஹம்மது ரிலா அவர்கள் இவருடைய பேரர் ஆவார்.

பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து இந்த உலகத்தையே வியக்க வைத்தவர் டாக்டர் ரிலா.

தகவல் ஒலிபரப்பு முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜன் குண்டடிப்பட்டு கல்லீரல் பழுதுப்பட்டிருந்த போது சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து தனி விமானத்தில் மும்பை வந்தவர் டாக்டர் முஹம்மது ரிலா.
முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் சந்திக்க விரும்பிய நபர் டாக்டர் முஹம்மது ரிலா. இவருடைய பரம்பரை எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் என்பதில் எங்களுக்கு பெருமை.

பள்ளிவாசல் மினாராவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்


* நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய - “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” - என்ற இந்தப்பாடலை கேட்காத காதுகள் தமிழகத்தில் இருந்திருக்க முடியாது மதங்களை கடந்து இரசித்த இந்தப் பாடலை எழுதியவர் எங்கள் ஊரைச்சார்ந்த மரியாதைக்குரிய காலம் சென்ற கவிஞர் அப்துல்சலாம் அவர்கள் என்று குறிப்பிடுவதில் நான் பெருமைக் கொள்கிறேன்.

* நான் ஏழாம் வகுப்பு படித்த தருணத்தில் எங்கள் ஊரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வருகைப்புரிந்த நாகூர் ஹனீபா அவர்களும் அதே மேடையில் கவிஞர் அப்துல்சலாம் அவர்களும் அமர்ந்திருந்து “இறைவனிடம் கையேந்துங்கள்” பாடலை அரங்கேற்றிய அந்தக் காட்சி இன்றும் என் மனத்திரையில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. கவிஞர் மறைந்தாலும் அவருடைய கவிதைகள் பல பாடகர்களின் வழியாக இன்னும் அவரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது..

* எங்கள் ஊரின் சிறந்த கவிஞர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் கிளியனூர் அஜீஸ், அவரைத் தொடர்ந்து அ.மு.இப்ராஹிம், கவிஞர் சஹிதா செல்வன் (அப்துல் அலீம்) போன்றவர்களை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்கிறேன்.

* எங்கள் ஊரின் பல சாதனைகளுக்கு துணையாக இருந்தவர் தூணாக இருந்தவர் மதிப்பிற்குரிய அபுல்ஹசன் அவர்கள்.

* ஆண்டுதோறும் ரமாளான் பெருநாளில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் எனக்கு கருத்து தெரிந்த நாளிலிருந்து இன்று வரையில் விளையாட்டு போட்டிகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.


* தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள் எங்கள் ஊரில் இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் துவங்கி நூற்றாண்டு காலத் தொடராக இருக்கிறது. அந்த காலத்தில் எங்கள் ஊரில் திருமணங்கள் இரண்டு தினங்கள் நடக்குமாம் இரவு முழுவதும் மாப்பிள்ளை ஊர்வலம் விடியற்காலை திருமணம் (நிக்காஹ்) தெருவெல்லாம் இறைமாலை திருநபி புகழ்பாடி சங்கத்து இளைஞர்கள் சுற்றிவருவார்கள். ஒவ்வொரு தெருவிலும் உள்ள உறவினர்கள் சங்கத்து பிள்ளைகளுக்கு தேனீர் குளிர்பானங்கள் என்று வழங்குவார்கள் சங்கத்து பாடகர்களுக்கு பனகற்கண்டு பால் வழங்குவார்கள். இந்த சங்கத்தில் 1970 க்கு பிறகு நானும் உறுப்பினராக இருந்து வந்தகாலமும் இருக்கிறது.(இது இப்போதும் நடைபெறுகிறதா? என்று கேட்டுவிடாதீர்கள்)


* நோன்பு காலங்களில் நோன்பு திறப்பதற்கு என்னதான் வசதி படைத்தவராக இருந்தாலும் பள்ளிவாசலில் எல்லோருடனும் அமர்ந்து நோன்பு திறப்பார்கள்.

* கிளியனூரில் சாதிக்கப்பட்ட நலத்திட்டங்கள் அரசினர் உயர் நிலைப்பள்ளி, மருத்துவமனை, தபால்நிலையம் ,டெலிபோன் எக்சேஞ், ஐஒபி வங்கி, வசதிகள் மின்சார வசதிகள் எல்லாமும் கிளியனூருக்கு மட்டுமல்ல கிளியனூரைச் சுற்றியுள்ள கோவில்கிளியனூர், பழவலாங்குடி, கடக்கம், முத்தூர், கீழப்பெரம்பூர், வேலூர், மேலப்பெரம்பூர், கீழவல்லம், அகரவல்லம், எடக்குடி, வல்லம், பெருஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள தலீத் குடியிருப்புகள் உட்பட எல்லா சமூக மக்களும் பயன்படத்தக்கதாகவே விளங்கி வருகின்றன.

* எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஊர்காரர்கள் ஒற்றுமையில் பல ஊர்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளார்கள் அதனால்தான் பல சாதனைகளை கிளியனூர் அன்று நிகழ்த்தி இருக்கிறது.

பலரும் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இன்றைய காலத்து இளைஞர்கள் படிப்பில் ஆர்வம் கொண்டு படித்துவருவது எங்கள் ஊருக்கும் நம் நாட்டிற்கும் கிடைத்திருக்கும் பலம். இது எங்கள் ஊரைப்பற்றிய நிறைவு அல்ல.

எங்கள் ஊரின் சிறப்புகளை எழுதுவதற்கு ஒரு தூண்டுகோளாக விளங்கிய சகோதரி ஸாதிகா அவர்களுக்கு மிக்க நன்றி.!